நிஜ சனி புகைப்படங்களை வெளியிட்ட நாசா
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சனிக்கோள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக 1997-ம் ஆண்டு கெசினி விண்கலத்தை அனுப்பியது.
ஏழு ஆண்டுகள் தொடர் பயணத்துக்குப்பின், 2004-ஆம் ஆண்டு சனிக்கோளின் சுற்றுவட்டப்பாதையை கெசினி விண்கலம் அடைந்தது.
சனி மற்றும் அதன் துணைக்கோள்கள் குறித்த திரளான தகவல்களை, கடந்த 13 ஆண்டுகளாக இந்த விண்கலம் தொடர்ந்து அனுப்பி வருகிறது. அவ்வப்போது நாசா இதை வெளியிட்டும் வந்துள்ளது.
இந்நிலையில், சனிக்கோளின் புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்பதை இந்தப்புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
மேலும், சனிக்கோளை சுற்றியிருக்கும் வளையங்களையும் கெசினி அழகாகப் படம்பிடித்துள்ளது. இருள் சூழ்ந்த சனிக்கோளைச்சுற்றி பனிப்படலம் போல அதன் வளையங்கள் புகைப்படத்தில் பதிவாகியுள்ளன.
சனிக்கோளிலிருந்து சுமார் 6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ம் திகதியன்று எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
சனிக்கோளுக்கும் வளையத்துக்கும் இடையே மொத்தம் 22 முறை டைவ் செய்யும் கெசினி விண்கலத்தின் பயணத்துக்கு 'கிராண்ட் ஃபைனல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment